தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், அதில், பிப்ரவரி மாதம் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி 19ம் தேதி துவங்குகிறது. ஜனவரி 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி செய்யப்படும். தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்பப் பெற ஜனவரி 30ம் தேதி கடைசி நாளாகும் என்று சம்பத் தெரிவித்தார்.